விருதுநகர் அருகே உள்ள பாப்பாகுடியில் கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் கீர்த்தனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
கால்நடை வளர்ப்போருக்கு நலத்திட்ட உதவிகள்
முகாமில் பங்கேற்ற கால்நடை வளர்ப்போரில் 24 பேருக்கு தாது உப்பு கலவை மற்றும் சீமைப்புல் கரணைகள் வழங்கப்பட்டன. மேலும், சிறந்த கிடாரி கன்று மேலாண்மைக்காக 3 பயனாளிகளுக்கும், சிறப்பாக கால்நடைகளை பராமரித்த 5 பயனாளிகளுக்கும் அமைச்சர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
தமிழகம் முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.7.63 கோடி மதிப்பீட்டில் 6,984 சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள் நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 18 முகாம்கள் என மொத்தம் 198 சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
“கால்நடைகள் கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கிய அங்கம்”
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, கால்நடைகள் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். அரசு செயல்படுத்தும் கால்நடை வளர்ப்புத் திட்டங்களை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மக்களுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால், அமைச்சர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“கால்நடைகளை குடும்பத்தில் ஒரு அங்கமாக பார்க்கிறோம்”
அமைச்சர் கீர்த்தனா பேசுகையில், கால்நடைகளை வெறும் விலங்குகளாக பார்க்காமல் குடும்பத்தின் ஒரு அங்கமாகவும், மகாலட்சுமியாகவும் கருதி மக்கள் வளர்த்து வருவதாக குறிப்பிட்டார்.
கால்நடைகளுக்கு நோய் ஏற்படும் போது உரிய சிகிச்சை மற்றும் பராமரிப்பு வழங்கும் நோக்கத்திலேயே இதுபோன்ற சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ச்சித் திட்டத்தின்’ கீழ் 100 சதவீத மானியத்தில் 5 ஆடுகள் வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியுடைய பெண்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்றும் அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநர் சரவணன், உதவி இயக்குநர் கார்த்திக், கால்நடை மருத்துவர்கள், துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

