நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்கள்
சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.
இந்த ஆய்வைத் தொடர்ந்து சுமார் 150 பயனாளிகளுக்கு சிறுதொழில் தொடங்குவதற்கான உதவிகள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக அரசு அறிவித்த திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு முறையாக சென்றடைகின்றனவா என்பதை உறுதி செய்வதே இந்த ஆய்வுகளின் நோக்கம் என அமைச்சர் கூறினார்.
கல்லறைத் தோட்டங்களுக்கு ரூ.1.36 கோடி நிதி
குலவணிகர்புரம் மற்றும் வெள்ளக்கோவில் பகுதிகளில் உள்ள கல்லறைத் தோட்டங்களில் சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1 கோடியே 36 லட்சம் நிதி விரைவில் ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சுத்தமல்லி நரசிங்கநல்லூர் கிராமத்தில் கபரஸ்தான் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசின் பரிசீலனையில் இருப்பதாக கூறினார்.
சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை
சட்டப்பேரவையில் வரும் வியாழக்கிழமை சிறுபான்மையினர் நலத்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அப்போது உலமாக்கள் நல வாரியம், கிறிஸ்தவ பணியாளர்கள் நல வாரியம், சிறுபான்மையினர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும், சிறுபான்மையின மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வரும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
சிறைவாசிகள் விடுதலை குறித்து பரிசீலனை
சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், பரோல் உள்ளிட்ட தற்காலிக விடுப்புகள் வழங்குவது தொடர்பாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
தவெக கூட்டணி குறித்து அமைச்சர் கருத்து
அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஷாஜகான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எதிர்கால சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள், 2029 நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
இந்த கூட்டணியை இஸ்லாமிய சமூகத்தினரும், அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், பாஜக ஆட்சி அமைப்பதைத் தடுக்கும் நோக்கில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்தார். தற்போது அமைச்சரவையில் இடம்பெற்று முழு மனநிறைவுடன் கூட்டணியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
2029-ல் இந்தியா கூட்டணியில் தவெக?
2029 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் இந்தியா கூட்டணியில் இடம்பெறும் என்றும், பாஜக தலைமையிலான கூட்டணியை எதிர்த்து இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ஜோசப் விஜயை முன்னிறுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும், தேர்தலுக்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு கூட்டணி மற்றும் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட விவகாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

