விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தியதாகக் கூறப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை உழவர் சந்தை அருகே உள்ள நியாயவிலைக் கடையில் தமிழக வெற்றிக் கழக நகரச் செயலாளர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதற்கு முன்பும் இதேபோல் நியாயவிலைக் கடையில் முதல்வர் விஜயின் புகைப்படம் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகி இருந்தது.
இதேபோல், அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் அருகே செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்குள் தமிழக வெற்றிக் கழக அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்திக்குமார் தனது ஆதரவாளர்களுடன் சென்று முதல்வர் விஜயின் புகைப்படத்தை மாட்டியதாகவும், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான காட்சிகளும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோவாக வெளியாகியுள்ளன.
மேலும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு சால்வை அணிவித்ததுடன், அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் நியாயவிலைக் கடைகள் போன்ற இடங்களில் அரசியல் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி உள்ளதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
கட்சி தலைமையின் அறிவுறுத்தல்களை மீறி இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகள் மீது தமிழக வெற்றிக் கழக தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி, அரசு கட்டுப்பாட்டில் உள்ள வளாகங்களில் அரசியல் நடவடிக்கைகள் நடைபெற்றனவா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

