திருச்சி மாவட்டம் கோப்பு அருகே அயிலாப்பேட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது குறைந்த அளவே விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பால் உற்பத்திக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக மாட்டுத் தீவனம், கால்நடை மருத்துவச் செலவு உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளதால் தற்போதைய கொள்முதல் விலை போதுமானதாக இல்லை என்றும் உற்பத்தியாளர்கள் கூறினர்.
மேலும், தமிழகத்தில் உற்பத்தியாகும் பாலை முழுமையாக அரசு கூட்டுறவு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதில்லை என்றும், இதனால் தனியார் நிறுவனங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அண்டை மாநிலங்களில் பால் கொள்முதல் விலை தமிழகத்தைவிட அதிகமாக வழங்கப்படுவதாகவும், எனவே தமிழகத்திலும் கொள்முதல் விலையை கணிசமாக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்காமல் பால் உற்பத்தியாளர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

