விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெசவாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக நூல் வழங்கப்படவில்லை எனக் கூறி, தமிழக அரசு மற்றும் கைத்தறித் துறையை கண்டித்து நெசவாளர்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் அருகே சேத்தூர் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சேத்தூர், ராஜபாளையம், புனல்வேலி, முகவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண் நெசவாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மண் சட்டிகள் மற்றும் தட்டுகளை ஏந்தியபடி, கடந்த நான்கு மாதங்களாக வேலை இல்லாமல் தவித்து வரும் நெசவாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள சேலைகளை அரசு கொள்முதல் செய்து, அதற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
மேலும், புதிய உற்பத்தித் திட்டங்கள் தொடங்கும்போது தறிகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களுக்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்றும் நெசவாளர்கள் வலியுறுத்தினர்.
நீண்ட காலமாக வேலைவாய்ப்பின்றி தவித்து வரும் நெசவாளர்களின் பிரச்சினைக்கு தமிழக அரசு மற்றும் கைத்தறித் துறை உடனடியாக தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

