திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நல வாரியத்தின் செயல்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பது தொடர்பாக தொழிலாளர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோள்களுக்கு ஏற்ப, அரசு தரப்பில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவாக பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தகவல் கிடைக்கும் இடங்களில் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்து, குழந்தைகளை மீட்டு வருவதாகவும் அமைச்சர் பர்வேஸ் தெரிவித்தார்.
தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக தற்போது குறைந்த அளவிலேயே புகார்கள் வந்துள்ளதாகவும், அவ்வாறு புகார்கள் வரும் இடங்களில் குழந்தைகளை மீட்டு, தொழிற்சாலைகள் உள்ளிட்ட பணியிடங்களில் குழந்தை தொழிலாளர் முறை இல்லாத நிலையை உருவாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

