விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், அதிமுகவில் இருந்து சமீபத்தில் தவெகவில் இணைந்த முன்னணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், நடிகராக இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த கருணாநிதி ஆகியோரை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து நடிகை திரிஷா குறித்தும் அவர் பேசினார். ஜெயலலிதா திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருந்ததைப் போல, தற்போது திரிஷாவும் முன்னணி நடிகையாக இருப்பதாக குறிப்பிட்டார். திரிஷாவை பெண் என்றும் பாராமல் இழிவாகவோ, தரக்குறைவாகவோ பேசினால் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் எச்சரித்தார்.
மேலும், ஜெயலலிதாவை ஏளனமாகப் பேசியதற்காக எம்.ஜி.ஆர். டெல்லிக்கு அனுப்பியதாக குறிப்பிட்ட ராஜவர்மன், அதேபோல் நடிகை திரிஷா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இருக்காது எனக் கூறினார்.
“அதிமுகவை 100 அடி பள்ளத்தில் புதைத்துவிட்டு அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம்” என எடப்பாடி பழனிசாமி கூறுவது எப்படி சாத்தியம் எனவும் ராஜவர்மன் கேள்வி எழுப்பினார்.
மேலும், தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியைப் போன்ற ஆட்சியை செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

