விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த தொழிலாளர்கள், மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை–கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 2013 ஆம் ஆண்டு முதல் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் சுமார் 50 பேர் டெங்கு தடுப்பு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். ஆரம்பத்தில் ரூ.80 தினக்கூலியாக பணியில் சேர்ந்த இவர்களுக்கு பின்னர் இரண்டு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு, தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.450 வழங்கப்பட்டு வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் நிலையில், கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் பழைய ஒப்பந்தம் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே பணியாற்றிய ஒப்பந்ததாரர் ஏல நடைமுறையில் விதிமுறை மீறல் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புதிதாக ஏலம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் காரணமாக ஆகஸ்ட் மாதம் முதல் டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படாததால் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தீர்வு கிடைக்காத நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் கிழக்கு மற்றும் தெற்கு ரதவீதிகள் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினரும் நகராட்சி அதிகாரிகளும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, பணியாளர்கள் சாலை மறியலை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.

