அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரியலூர் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர்ஸ் நலச்சங்கம் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் 187-வது உலக புகைப்பட தின விழா நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத்தின் செயலாளர் கர்ணன் முன்னிலை வகித்தார். சங்கத் தலைவர் கொளஞ்சி அனைவரையும் வரவேற்று தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக ஜெயங்கொண்டம் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமையும், மது மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார். இந்த
பேரணி ஜெயங்கொண்டம் கடைவீதி வழியாக சென்று அரசு மேல்நிலைப்பள்ளியை அடைந்தது. அங்கு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
உலக புகைப்பட தின விழாவையொட்டி நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் பொதுமக்கள் 156 பேருக்கு கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 46 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. மேலும், உயர் சிகிச்சை தேவைப்பட்டவர்கள் அரியலூர் ஜோசப் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் சங்க பொருளாளர் வீரப்பன் நன்றி கூறினார்.

