காவிரியில் தமிழர்களின் உரிமைகளை நிலை நாட்ட வரும் செப்டம்பர் 1ம் தேதி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மேகதாது நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கட்சியின் மாநில தலைவர் கே எம் சரீப் இன்று தெரிவித்தார். இது குறித்து நெல்லையில் இன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக ஜனநாயக மக்கள் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சியோடு கூட்டணி அமைத்து புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டது. கர்நாடக அரசு மேகதாது காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்கிறது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஆணையம், வாரியம் என பல நடுநிலை அமைப்புகள் உத்தரவிட்ட போதும் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டினால் மேலும் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும். எனவே மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்தும், காவிரியில் உரிய பங்கை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், காவிரியில் பெங்களூர் நகர் பகுதியில் கழிவுநீர் கலப்பதை நிறுத்த கோரியும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று அப்பாவி தமிழர்கள் மான் வேட்டை என்கிற பெயரில் சுடப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அவர்களை சுட்டுக் கொன்ற வன அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் வருகிற செப்டம்பர் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து மேகதாது பகுதி நோக்கி ஒரு நடை பயணத்தை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மேற்கொள்ள இருக்கிறது. இந்தப் நடைபயணத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் தமிழக மக்களை ஓரணியில் திரட்டி தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். எங்களது நடை பயணத்துக்கு தடை விதித்தால் தடையை மீறி மேகதாதுக்கு செல்வோம். தொடர்ச்சியாக வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் தமிழர்கள் மீதான தாக்குதலை செயல்படுத்தி வருகின்றனர். ஓட்டலில் சாப்பிடுகிறவர்களை அவமானப்படுத்துகிறார்கள். எங்களது நடை பயணத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும். கேரள முதலமைச்சர் முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்ட வலியுறுத்துகிறார். அதற்கான பணத்தை நாங்களே தருகிறோம் என்கிறார். இதுவும் தவறான செயல்பாட்டுக்கு வழிவகுக்கும். கடந்த போரின் போது பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் சென்றதை இந்தியா தடை செய்தது. அதை எதிர்த்து பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றது. ஆனால் நாம் தமிழகத்திற்கு தண்ணீர் கேட்டு எந்த நீதிமன்றத்திற்கு செல்வது என்று தெரியவில்லை. கர்நாடகத்தை தொடர்ந்து தற்போது கேரளா அரசும் நமக்கு எதிராக செயல்படுகிறது. முதலமைச்சர் விஜய் கனிம வளங்களை 3 மாதங்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதித்து இருப்பதை வரவேற்கிறோம். அதேபோல் கேரளாவுக்கு செல்கிற காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களையும் உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அப்போதுதான் முல்லை பெரியாரில் நமக்கு ஒரு நியாயம் கிடைக்கும். அனைத்து எலக்ட்ரானிக் குப்பைகளும் பெங்களூரில் இருந்து தமிழகத்தின் ஓசூர் பகுதியில் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளை இதுவரை யாரும் தடுக்கவில்லை. தமிழக அரசு பெங்களூரில் இருந்து கொண்டுவரப்படும் எலக்ட்ரானிக் குப்பைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து மலைகளையும் உடைத்து நொறுக்கி கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கும் கொண்டு செல்கிறார்கள். கேரளாவில் உள்ள ஒரு மலையை கூட வெட்டுவதற்கு அந்த மாநில அரசு அனுமதிப்பதில்லை. இது போன்ற சூழ்நிலையில் தமிழகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எங்களைப் போன்ற கட்சிகளுக்கு உள்ளன. தமிழகத்தை காப்பாற்றும் என்ற நோக்கத்தோடு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி இந்த மேகதாது நோக்கிய நடை பயணத்தை முன்னெடுக்கிறது. நடை பயணத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக நலன் சார்ந்த ஆர்வலர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார் பேட்டியின் போது கட்சி நிர்வாகி ஜமால் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்
செய்திகள்
காவிரி உரிமைக்காக செப்.1-ல் மேகதாது நோக்கி நடைபயணம்: தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அறிவிப்பு
🕒 21 ஆக., 2026, 09:57 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

