விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, விதிமுறைகளை மீறித் தொடங்கப்பட உள்ள தனியார் கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி, கம்மாய்க்கரை பாதுகாப்பு இயக்கத்தின் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை - திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட மடத்துப்பட்டி மற்றும் கல்லூரிணி கிராமப் பகுதியில் புதிய தனியார் கல்குவாரி அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு விதிமுறைகளின்படி, கல்குவாரி அமையவுள்ள இடத்திலிருந்து 300 மீட்டர் சுற்றளவிற்குள் குடியிருப்புப் பகுதிகள், நீர்நிலைகள், ஓடைகள் அல்லது கால்நடை வளர்ப்புப் பகுதிகள் இருக்கக் கூடாது. ஆனால், முன்மொழியப்பட்டுள்ள பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களின் வீடுகள், விளைநிலங்கள் மற்றும் முக்கியக் கம்மாய்கள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்துக் கம்மாய்க்கரை பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரசல்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"மக்களின் குடியிருப்புக்கான வீட்டு வரி ரசீது மற்றும் மின் கட்டண ஆதாரங்கள் எதையும் முறையாக ஆய்வு செய்யாமல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இச்சம்பவத்தில் முன்னாள் அமைச்சர்களின் அரசியல் அழுத்தம் இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், வருவாய் கோட்டாட்சியரும் தங்களது பொறுப்புகளைத் தட்டிக்கழித்து மௌனம் காக்கின்றனர். மேலும், உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவர் நீர்நிலைகளை மூடி, சட்டவிரோதமாகச் சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்."
தொடர்ந்து பேசிய அவர், "தற்போதைய தமிழக அரசு, இத்தொகுதியில் வாழும் ஏராளமான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவளத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் திருச்சுழி தொகுதிக்கு நேரில் வந்து உரிய ஆய்வு நடத்த வேண்டும். இந்த விதிமீறல் கல் குவாரி திட்டத்தைக் கைவிடாவிட்டால், கல்லூரிணி மற்றும் மடத்துப்பட்டி கிராம மக்களை ஒன்றிணைத்துத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்" என எச்சரித்தார்.

