ஆசியாவிலேயே ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் விநாயகப் பெருமானுக்கு தனி சன்னதி உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பிரசித்தி பெற்ற மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட மகாகணபதி திருக்கோவில் நெல்லையில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும் இந்த விழா, இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, நிலவேணி அம்பாள் சமேத உச்சிஷ்ட மகாகணபதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோவில் கொடிமரத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகமும், கொடிப்பட்டத்திற்கும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
இதையடுத்து மேளதாளங்கள் முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.
கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, உச்சிஷ்ட மகாகணபதி சுவாமி மேளதாளம் முழங்க தாமிரபரணி நதிக்கரைக்கு எழுந்தருளுவார். அங்கு சுவாமிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

