தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் மறியலை தட்டிக்கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (SSI) மற்றும் அந்த இளைஞர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
தஞ்சை ரயில் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதாக கூறி, அக்கட்சியினர் முதலில் மாநகராட்சி அலுவலக நுழைவாயிலில் போராட்டம் நடத்தினர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள், தங்களுக்கு அவசர வேலை இருப்பதாகவும் வழியை விடுமாறும் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நிலைமை மோசமடைவதைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அப்துல் ரஹீம் மற்றும் இளைஞர் ஆகாஷ் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் எஸ்.எஸ்.ஐ இளைஞரை கன்னத்தில் அறைந்ததாகவும், அதற்கு பதிலாக அந்த இளைஞரும் எஸ்.எஸ்.ஐ.யை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்து காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் தஞ்சாவூர் அருகே விளார் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என தெரியவந்துள்ளது. அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் தாக்கியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், சாலை மறியல், போலீசாரின் நடவடிக்கை மற்றும் இளைஞர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்ட பின்னரே உண்மை நிலவரம் தெளிவாகும்.

