நெல்லை மாவட்டம் கல்லூர் அருகே பிரபல தனியார் பேப்பர் மில் செயல்பட்டு வருகிறது.
இங்கு 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்தத் தனியார் பேப்பர் மில்லில் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு அதிக அளவில் காகிதப் பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால், தீ மிக வேகமாகப் பரவியது. மேலும், அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததன் காரணமாக, காகிதப் பண்டல்கள் முழுவதும் தீப்பிடித்து எரிந்து பெரும் விபத்தாக மாறியது. இதன் விளைவாக, அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. தீ விபத்து குறித்து உடனடியாகத் தகவல் அறிந்த நெல்லை டவுண், பேட்டை மற்றும் சேரன்மகாதேவி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தீயணைப்பு நிலைய அதிகாரிகள் முன்னிலையில், 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காற்றின் திசை மற்றும் வேகம் தீயணைப்புப் பணிகளுக்குச் சவாலாக இருந்தாலும், வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை , தீ விபத்துக்கான சரியான காரணம் மற்றும் இதனால் ஏற்பட்டுள்ள சேதங்களின் விபரங்கள் குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை. இருந்த போதும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சீதப்பற்பநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்து நேரிட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது .

