திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள செயின்ட் பால்ஸ் சாலை மேற்கு, அப்பாசாமி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரிவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களை அந்த நபர் நோட்டமிடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் சைடு லாக்கை உடைக்க முயற்சிப்பது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன. மேலும், நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் அந்த நபர் அப்பகுதியில் சுற்றித்திரியும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் முகமூடி அணிந்திருந்ததால், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் வீடுகளுக்கு வெளியே வாகனங்களை நிறுத்தி வைக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் இரவு நேர காவல் ரோந்தை அதிகரித்து, சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரியும் நபர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
செய்திகள்
நெல்லையில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர் நடமாட்டம் – சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு
🕒 19 ஆக., 2026, 11:43 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
