மாணவர்களின் புதுமைச் சிந்தனை, தொழில்நுட்ப திறன் மற்றும் பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வு காணும் திறனை வளர்க்கும் நோக்கில், கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘திறன் 1.0’ ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது.
கல்லூரி சார்பில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த உள்நாட்டு ஹேக்கத்தான், 36 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்றது. இதில் 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குழுக்களாக பிரிந்து மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
வழக்கமான வகுப்பறை சூழலைத் தாண்டி, மாணவர்கள் தங்களது குழுவினருடன் தொடர்ந்து 36 மணி நேரம் இணைந்து சிந்தித்தும், திட்டமிட்டும், புதிய தீர்வுகளை உருவாக்கியும், அவற்றை சோதனை செய்தும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் பயிலும் மாணவர்களுடன், தொழில்நுட்பம் சாராத பிற துறைகளைச் சேர்ந்த மாணவர்களும் இணைந்து போட்டியில் பங்கேற்றனர். தலா 6 பேர் கொண்ட குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, வழங்கப்பட்ட பிரச்சினைகளுக்கு புதுமையான மற்றும் பயனுள்ள தீர்வுகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சிறந்த தீர்வுகளுக்கு பரிசுகள்
மாணவர்கள் உருவாக்கிய திட்டங்கள் மற்றும் தீர்வுகளை தொழில்துறை வல்லுநர்கள், நிபுணர்கள் அடங்கிய குழுவினர் மதிப்பீடு செய்தனர். இதில் சிறந்த மற்றும் புதுமையான தீர்வுகளை உருவாக்கிய மாணவர் குழுக்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்துஸ்தான் குழும நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் பிரியா, கல்லூரி முதல்வரும் நிகழ்ச்சித் தலைவருமான டாக்டர் பொன்னுசாமி ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் டாக்டர் சரவணன், இணைப் பேராசிரியர்களான டாக்டர் கௌரி மற்றும் டாக்டர் சிவபிரிந்தா உள்ளிட்டோர், பல்வேறு துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
36 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற ‘திறன் 1.0’ ஹேக்கத்தான், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு, குழு ஒருங்கிணைப்பு மற்றும் புதுமையான சிந்தனை திறன்களை வெளிப்படுத்துவதற்கான சிறந்த தளமாக அமைந்தது.

