விருதுநகர் ரோட்டரி கிளப் ஆஃப் எலைட் சங்கம் சார்பில், 16-வது ஆண்டாகப் பள்ளிகளுக்கிடையேயான 'மெகா டேலன்ட் ஷோ' (Mega Talent Show) பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் 6 பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியைத் தொழிலதிபர் 'பென்டகன்' ஜவகர் முறைப்படி தொடங்கிவைத்தார். போட்டிகளில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் தங்களின் பல்வேறு கலைத் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். இப்போட்டிகளுக்கு ஆரிஃப், சீமான், தனுஷ்மதி, வேணி மற்றும் கவிதா பாண்டியன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டு வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.
போட்டிகளின் நிறைவாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன், வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுக்கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை ரோட்டரி அமைப்பின் முன்னாள் ஆளுநர் முருகதாஸ், எலைட் சங்கத் தலைவர் பொறியாளர் சிவகுமார் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் திறம்பட மேற்கொண்டனர். நிகழ்வின் நிறைவில் அமைப்பின் செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார். இவ்விழாவில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

