நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான ஆடி அமாவாசைத் திருவிழா வரும் 12-ஆம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரவுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் கோவில் வளாகப் பகுதியில் தற்காலிகக் குடில்கள் அமைத்துத் தங்கி சாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், குடில்களில் தங்கும் பக்தர்கள் தங்களது உடைமைகள் மற்றும் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதற்கு வசதியாக, இன்று ஒரு நாள் மட்டும் தனியார் வாகனங்களில் கோவில் பகுதிக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் கோவில் பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக, பாபநாசம் வனச் சோதனைச் சாவடி பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
மேலும், வனப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, நாளை முதல் வரும் 12-ஆம் தேதி வரையிலான 3 நாட்களுக்குத் தனியார் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, அரசுப் பேருந்துகளில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

