திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ராமாயன்பட்டி ஊராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் கழிவுச் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமாயன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
ராமாயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கு மற்றும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தின் காரணமாக, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், அங்கு புதிதாக கோழிக் கழிவு அரவை நிலையம் அமைப்பதற்கும், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை விரிவாக்கம் செய்வதற்கும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாநகராட்சியின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ராமாயன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் டேவிட் தலைமையில் அவசரக் கூட்டம் கூடி விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
- மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் விரிவாக்கப் பணிகளை உடனடியாகக் கைவிட வேண்டும்.
- ராமாயன்பட்டி ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டங்களை வேறு மாற்று இடத்திற்கு மாற்ற மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு வலியுறுத்துவது.
- இப்பிரச்சினை குறித்து திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர், தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்துவது.
இந்த அவசரக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பழனியம்மாள், மகேஸ்வரி, பேபி பொன்னராசி, இசக்கியம்மாள், சுப்புலட்சுமி, வீரபுத்திரன், ஆனந்தராஜ், நம்பிச்செல்வம் மற்றும் ரேவதி ஆகியோர் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

