சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர் வெடிவிபத்துகளைத் தடுத்து, விபத்தில்லா பட்டாசு உற்பத்தியை மேற்கொள்வது குறித்து நடைபெற்ற இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, தொழிலக பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் போது, அமைச்சர் கீர்த்தனா முன்னிலையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளையும், நீண்டகால ஆதங்கங்களையும் முன்வைத்தனர். அப்போது பேசிய உற்பத்தியாளர் ஒருவர், "பட்டாசு ஆலைகளில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படும்போது, ஆலை உரிமையாளர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுகின்றனர். இதனால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனிருந்து தேவையான உதவிகளை வழங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. கரூர் துயர சம்பவத்தின் போது முதல்வர் விஜய் அவர்கள் அடைந்த வேதனையைப் போல, நாங்கள் ஒவ்வொரு நாளும் வேதனையை அனுபவித்து வருகிறோம். எனவே, விபத்துகளின் போது ஆலை உரிமையாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் உடனடி கைது நடவடிக்கையைக் கைவிட அரசு பரிசீலிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மற்றொரு உற்பத்தியாளர், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 60 பட்டாசு ஆலைகள் இயங்குவதற்குத் தயாராக இருந்தும், அதற்கான அனுமதியை வழங்க அதிகாரிகள் மறுத்து வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அனுமதி கோரிச் செல்லும் தங்களை அரசு அதிகாரிகள் "நாயை விட மோசமாக" நடத்துவதாக அவர் வேதனை தெரிவித்தார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 180 கோடி ரூபாய் உள்நாட்டு முதலீட்டைச் செய்ய முதலீட்டாளர்கள் தயாராக இருந்தும், அதனை ஈர்க்க அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் சாடினார்.
உற்பத்தியாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும், புகார்களையும் கேட்டறிந்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தொழிலாளர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், பட்டாசுத் தொழிலை மேம்படுத்த அரசு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்று உறுதியளித்தார்.

