விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக திருமணமான இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நரிக்குடி அருகே உள்ள அகத்தாகுளம் கிராமத்தைச் சேர்ந்த சடையாண்டியின் மகன் ராமமூர்த்தி. திருமணமான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை வீட்டின் அருகே உள்ள கரும்புத் தோட்டத்தில் ராமமூர்த்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நரிக்குடி போலீசார் ராமமூர்த்தியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

