விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்தல் மற்றும் பதுக்கி வைப்பதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அனுப்பன்குளம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் 2 பேரை கைது செய்துள்ளனர்.
அனுப்பன்குளம் பகுதியில் உள்ள பட்டாசு கடை அருகே போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அங்கு தனியாக குடோன் அமைத்து பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த த.வெ.க. தென்கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் விவேக் மற்றும் மனோஜ்குமார் ஆகிய இருவரையும் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து குடோனில் சோதனை மேற்கொண்ட போலீசார், சுமார் 500 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு மற்றும் சேமிப்பு தொடர்பாக விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அனுப்பன்குளத்தில் நடைபெற்ற இந்த சோதனையும், இருவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

