விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நாளை (12.08.2026) முதல் நடைபெறவிருந்த சிறு பட்டாசு உற்பத்தியாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அண்மையில் அரசு அதிகாரிகள் நடத்திய ஆய்வுகளின்போது, பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறி சுமார் 200 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மூடப்பட்ட ஆலைகளைச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, காலதாமதமின்றி மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, 'விருதுநகர் மாவட்ட உரிமம் பெற்ற சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம்' சார்பில் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, பட்டாசு ஆலைகளுக்குப் பிறப்பிக்கப்பட்ட தடையாணை உத்தரவைப் படிப்படியாக விலக்கிக்கொண்டு, மீண்டும் ஆலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த உறுதியை ஏற்று, நாளை முதல் நடைபெறவிருந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக 'விருதுநகர் மாவட்ட உரிமம் பெற்ற சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர்' அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

