"போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு - 2026" என்ற இலக்கை முன்னிறுத்தி, போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு விழா, விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என் (VHNSN) செந்தில்குமார நாடார் கல்லூரியில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏராளமான கல்லூரி மாணவ-மாணவியர் பங்கேற்று விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக, சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான போதைப்பொருள் எதிர்ப்பு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வை, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் ஆட்சித்தலைவர் தலைமையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
மாணவர்கள் ஏற்ற உறுதிமொழி:
"போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து, அதற்கு ஒருபோதும் ஆளாக மாட்டேன். எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த முழுப் பங்களிப்பைத் தருவேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம், போதைப் பொருட்களைத் தமிழ்நாட்டில் இருந்து வேரறுக்க அரசுக்குத் துணையாக நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன்" என மாணவர்கள் உளமார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சிறந்த அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவம்:
இதனைத் தொடர்ந்து, 2025-2026 ஆம் கல்வியாண்டில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் சிறப்பாகச் செயல்பட்ட போதைப்பொருள் எதிர்ப்பு குழுக்கள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகளுக்கு (NSS / NCC) பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா வழங்கினார். மொத்தம் 3 கல்லூரிகள் மற்றும் 9 பள்ளிகளைச் சேர்ந்த குழுக்களுக்கு ரூ.90,000 மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற கல்வி நிறுவனங்களின் விவரம்:
1. கல்லூரி அளவிலான சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு குழுக்கள்:
- முதலிடம் (ரூ. 15,000): விருதுநகர் வே.வெ.வன்னிய பெருமாள் மகளிர் கல்லூரி
- இரண்டாமிடம் (ரூ. 10,000): சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
- மூன்றாமிடம் (ரூ. 5,000): சிவகாசி காளீஸ்வரி கல்லூரி
2. பள்ளி அளவிலான சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு குழுக்கள்:
- முதலிடம் (ரூ. 15,000): விருதுநகர் சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- இரண்டாமிடம் (ரூ. 10,000): தோணுகால் அரசு உயர்நிலைப்பள்ளி
- மூன்றாமிடம் (ரூ. 5,000): இராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளி
3. பள்ளி அளவிலான சிறந்த தன்னார்வலர் குழுக்கள் (NSS / NCC):
- முதலிடம் (தலா ரூ. 7,500): செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு பள்ளி
- இரண்டாமிடம் (தலா ரூ. 5,000): குல்லூர்சந்தை ஸ்ரீவீரப்பா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மற்றும் சாத்தூர் எஸ்.எச்.என்.எட்வர்டு மேல்நிலைப்பள்ளி
- மூன்றாமிடம் (தலா ரூ. 2,500): மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் முத்துராமலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி

