விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய இந்தக் கூட்டத்தில், சில அதிகாரிகளின் அலட்சியமான செயல்பாடு விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அதிகாரிகளில் சுமார் 20 சதவீதம் பேர் வரவில்லை என்றும், கலந்துகொண்ட சில அதிகாரிகளும் விவசாயிகளின் குறைகளை கவனமாக கேட்கவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
ஆட்சியர் பேசும்போதே செல்போன், தூக்கம்
கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் நேரடியாக விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேசி கொண்டிருந்தபோதும், சில அதிகாரிகள் செல்போனில் சமூக வலைதளங்கள் மற்றும் ரீல்ஸ் பார்ப்பதிலும், தொடர்ந்து மொபைல் பயன்படுத்துவதிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சிலர் கூட்ட அரங்கிலேயே மேஜை மீது தலை சாய்த்து தூங்கியதாகவும், தரையை நோக்கி குனிந்து செல்போனில் மூழ்கியிருந்ததாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
எங்கள் குறைகள் எப்படி தீரும்?
விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அதிகாரிகளே பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டால், தங்களது மனுக்களுக்கு எவ்வாறு தீர்வு கிடைக்கும் என கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
கூட்டம் முடிந்த பின்னரும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கு குறித்து விவசாயிகள் மத்தியில் பரவலான எதிர்ப்பு மற்றும் ஏமாற்றம் நிலவியது.

