இந்தியாவில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் உணவுப் பழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் வீட்டு நுகர்வு செலவின ஆய்வு (HCES) அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் நுகர்வு குறைந்துள்ள நிலையில், பால் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
2022 ஆகஸ்ட், 2023 ஜூலை-ஆகஸ்ட் மற்றும் 2024 ஜூலை ஆகிய காலகட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, நகர்ப்புறங்களில் தானியங்களின் நுகர்வு விகிதம் 2022-23ஆம் ஆண்டில் 38.8 சதவீதமாக இருந்தது. இது 2023-24ஆம் ஆண்டில் 38.7 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல், கிராமப்புறங்களில் இந்த விகிதம் 46.9 சதவீதத்திலிருந்து 45.9 சதவீதமாக சரிந்துள்ளது.
பருப்பு வகைகளின் நுகர்வும் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் 9.6 சதவீதமாக இருந்த நுகர்வு 9.1 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 8.8 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
மறுபுறம், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் நுகர்வு அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் இது 12.8 சதவீதத்திலிருந்து 12.9 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 10.6 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
முட்டை, மீன் மற்றும் இறைச்சி வகைகளின் நுகர்வு கிராமப்புறங்களில் 12.3 சதவீதத்திலிருந்து 12.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் இந்த விகிதம் 14.1 சதவீதமாக மாற்றமின்றி நீடித்துள்ளது.
மேலும், பிற உணவுப் பொருட்களின் நுகர்வு கிராமப்புறங்களில் 21.4 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 24.8 சதவீதத்திலிருந்து 25.3 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
கலோரி உட்கொள்ளும் அளவிலும் சிறிய அளவிலான குறைவு பதிவாகியுள்ளது. 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் கிராமப்புற மக்களின் சராசரி தினசரி கலோரி உட்கொள்ளல் முறையே 2233 மற்றும் 2212 கிலோகலோரியாக இருந்தது. நகர்ப்புறங்களில் இந்த அளவு 2250 கிலோகலோரியிலிருந்து 2240 கிலோகலோரியாக குறைந்துள்ளது.
இந்த ஆய்வு, இந்தியர்களின் உணவுப் பழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையும், பாரம்பரிய தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் பயன்பாடு குறைந்து, பால் பொருட்கள் உள்ளிட்ட பிற உணவுப் பொருட்களின் நுகர்வு அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறது.

