தமிழ்நாட்டில் 2025-26ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பணிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பருவத்தில் இதுவரை இல்லாத அளவாக 46.5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளில் நெல் கொள்முதலுக்கான மாநில அரசின் ஊக்கத் தொகை உயர்த்தப்படவில்லை என்றும், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஊக்கத் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.130 மற்றும் பொதுரக நெல்லுக்கு ரூ.105 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், 2025-26ஆம் ஆண்டு பருவத்திற்கான சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,545 மற்றும் பொதுரக நெல்லுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திமுக அரசின் 51 மாத கால ஆட்சியில் மொத்தம் 1.83 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ரூ.40,440.21 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் மாநில அரசின் ஊக்கத் தொகையாக மட்டும் ரூ.1,816.46 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
2025-26ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பணிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதன்படி வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டுக்கான நெல் கொள்முதல் நடவடிக்கைகள் தொடங்கவுள்ளதாகவும் அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

