நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே கரடியைக் கண்டு பயந்து, இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபருக்கு வனத்துறை சார்பில் முதற்கட்ட நிவாரண உதவி வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரக் கிராமமான திருப்தியாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (32). இவர் நேற்று தனது சகோதரர் கல்யாணசுந்தரத்துடன் (30) இருசக்கர வாகனத்தில் பாபநாசம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். முத்துக்குமார் வாகனத்தை ஓட்டிச் சென்ற நிலையில், வீட்டின் அருகேயுள்ள பத்ரகாளியம்மன் கோவில் அருகே சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த கரடி ஒன்று திடீரெனச் சாலையைக் கடந்துள்ளது.
அருகில் கரடியைக் கண்டதும் பதற்றமடைந்த முத்துக்குமார், கட்டுப்பாட்டை இழந்து வாகனத்துடன் கீழே விழுந்தார். இதில் முத்துக்குமாருக்கு முகம், கால் மற்றும் தோள்பட்டைப் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடன் பயணித்த கல்யாணசுந்தரம் காயமின்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பினார். மேலும், அந்த கரடி அவர்களைத் தாக்காமல் அங்கிருந்து சென்றது. காயமடைந்த முத்துக்குமார் உடனடியாக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முத்துக்குமாரைச் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், வனத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட முத்துக்குமாருக்கு ரூ.5,000 நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.
இப்பகுதியில் அண்மைக்காலமாக மலையடிவாரக் கிராமங்களில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதும், சமீபத்தில் பாபநாசம் அருகே முருகன் என்ற தோட்டத்துக் காவலாளி கரடி தாக்கி உயிரிழந்த சம்பவமும் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே முத்துக்குமார் நிலைதடுமாறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக ரூ.50,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்ட பிறகு மீதமுள்ள தொகை வழங்கப்படும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

