விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் திருமண நிகழ்வை முன்னிட்டு பட்டாசு வெடித்தபோது, அதிலிருந்து வெளியான தீப்பொறி இருசக்கர வாகனத்தில் விழுந்து தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் கருநெல்லிநாதர்–மீனாட்சியம்மன் திருக்கோவிலில் இன்று ஆவணி மாத முகூர்த்த தினத்தை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து புதுமணத் தம்பதிகள் கோவிலில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவர்களை வரவேற்கும் விதமாக உறவினர்கள் கோவில் முன்பாக பட்டாசுகளை வெடித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசிலிருந்து வெளியான தீப்பொறி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது.
இதையடுத்து இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீ வேகமாகப் பரவியதால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது.
திருமண நிகழ்வில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீப்பொறியால் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

