திருச்சியைச் சேர்ந்த சமூகப் பணியாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான எஸ். தாமோதரனின் 60 ஆண்டுகால வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்துள்ள “வாய்மை என்பதே யாதெனின்” என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த விழாவில் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சுயசரிதை நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
சமூக மாற்றத்திற்காக எஸ். தாமோதரன் மேற்கொண்ட நீண்டகாலப் பணிகள், கிராமப்புற மக்களுடன் இணைந்து செயல்பட்ட அனுபவங்கள், சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சமூகப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் மற்றும் அவரது வாழ்க்கைப் பயணத்தின் அனுபவங்கள் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
“வாய்மை என்பதே யாதெனின்” என்ற தலைப்பு, உண்மை, நேர்மை மற்றும் சமூகப் பொறுப்பை அடிப்படையாகக் கொண்டு எஸ். தாமோதரன் மேற்கொண்ட பணிகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாக விழாவில் தெரிவிக்கப்பட்டது.
நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கிராமாலயா பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு எஸ். தாமோதரனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

