தென்னிந்திய உணவு வகைகள் அவற்றின் சுவைக்காக மட்டுமல்ல, அவற்றின் பின்னணியில் இருக்கும் வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்காகவும் பிரபலமானவை. பல உணவுகள் அவை தோன்றிய ஊர்களின் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. அந்த ஊரின் பாரம்பரியம், சமையல் முறை மற்றும் உள்ளூர் சுவையை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ள 5 பிரபலமான தென்னிந்திய உணவுகள் குறித்து பார்ப்போம்.
1. காஞ்சிபுரம் இட்லி – தமிழ்நாடு
காஞ்சிபுரம் நகரில் உள்ள கோவில்களில் பிரசாதமாக வழங்கப்பட்ட இந்த இட்லி, சாதாரண இட்லியிலிருந்து வித்தியாசமானது. மிளகு, சீரகம், இஞ்சி, நெய் போன்ற பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுவதால் தனித்துவமான மணமும் சுவையும் கொண்டுள்ளது. பாரம்பரியமாக மந்தாரை இலை அல்லது சிறப்பு பாத்திரங்களில் ஆவியில் வேகவைக்கப்படுகிறது.
2. ஆம்பூர் பிரியாணி – தமிழ்நாடு
வேலூர் மாவட்டத்தின் ஆம்பூரில் தோன்றிய இந்த பிரியாணி, தமிழ் முஸ்லிம் சமையல் மரபின் அடையாளமாக கருதப்படுகிறது. பாஸ்மதி அரிசிக்கு பதிலாக சீரக சம்பா அரிசி பயன்படுத்தப்படுவது, குறைந்த மசாலாவில் அதிக சுவை கிடைப்பது ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.
3. செட்டிநாடு சிக்கன் – தமிழ்நாடு
சிவகங்கை மற்றும் காரைக்குடி பகுதிகளை உள்ளடக்கிய செட்டிநாடு பிராந்தியத்தில் உருவான இந்த உணவு, காரமான சுவை மற்றும் மணமிக்க மசாலாக்களுக்குப் பெயர் பெற்றது. கருப்பு மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ உள்ளிட்ட மசாலாக்களின் கலவையே இதன் தனித்துவம்.
4. மதுரை ஜிகர்தண்டா – தமிழ்நாடு
மதுரையின் மிகவும் பிரபலமான குளிர்பானமான ஜிகர்தண்டா, பால், பாதாம் பிசின் (Badam Pisin), நன்னாரி சிரப் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கோடை காலத்தில் உடலை குளிர்விக்க உதவும் இந்த பானம், மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
5. மைசூர் மசாலா தோசை – கர்நாடகா
கர்நாடக மாநிலத்தின் மைசூரில் தோன்றிய இந்த தோசை, உள்ளே காரமான சிவப்பு சட்னி தடவி, உருளைக்கிழங்கு மசாலா வைத்து தயாரிக்கப்படுகிறது. மொறுமொறுப்பான தோசை மற்றும் காரமான சுவை காரணமாக உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளது.
உணவும்... ஊரும்... ஒரே அடையாளம்!
இந்த உணவுகள் வெறும் சமையல் குறிப்புகள் மட்டுமல்ல; அவை உருவான பகுதிகளின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் சின்னங்களாகவும் திகழ்கின்றன. அந்தந்த ஊருக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அந்த ஊரின் பெயரால் அழைக்கப்படும் உணவுகளை சுவைப்பதை தவறவிடுவதில்லை.

