வேலூர்: காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 41-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் பல்கலைக்கழக துணைத் தலைவர்கள் சேகர், சங்கர், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டாடா நிறுவனத்தின் துணைத் தலைவர் பாபு உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளை முடித்த 11,276 மாணவர்களுக்கும், முனைவர் பட்டம் பெற்ற 785 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த 84 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
“ஏ.ஐ. மூலம் நாட்டை கட்டமைக்க வேண்டும்”
பட்டங்களை வழங்கி டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேசுகையில், பட்டம் பெற்ற மாணவர்கள் தொடர்ந்து வேலைவாய்ப்பு அல்லது ஆராய்ச்சிக் கல்வியில் ஈடுபட உள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
டெல்லியில் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மாணவர்களின் ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு (AI) முக்கியப் பங்கு வகிப்பதாக தெரிவித்த ரேகா குப்தா, இந்தியாவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களாக மட்டுமே மாணவர்கள் இருக்கக் கூடாது என்றும், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டை கட்டமைப்பவர்களாகவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களாகவும் மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளபடி, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாகவும் வல்லரசாகவும் உருவாக்குவதில் இளைஞர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
நாட்டின் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும், இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
“காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்” – ஜி. விசுவநாதன்
முன்னதாக விழாவில் பேசிய வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன், தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்தார்.
இதேபோல் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் உயர்கல்வி நிர்வாகம் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார்.
எனவே, புதிய மத்திய கல்வி அமைச்சர் அந்தந்த மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி. விசுவநாதன் வலியுறுத்தினார்.

