திருநெல்வேலி மாநகர் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், Grindr செயலி மூலம் அறிமுகமான நபரின் அழைப்பை நம்பி சென்ற ஆடிட்டரை தாக்கி பணம் கேட்டு மிரட்டியதாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான இளைஞர் ஒருவர், தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். வேலை தொடர்பாக திருநெல்வேலி வந்திருந்த அவர், Grindr செயலி மூலம் அறிமுகமான நபரின் அழைப்பின் பேரில் புதிய பேருந்து நிலையம் அருகே சென்றதாக கூறப்படுகிறது. அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர், அவரை டக்கரம்மாள்புரம் மீட்பர் நகர் பின்புறம் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த மேலும் 3 பேர் சேர்ந்து அவரை பிடித்து, முகம் மற்றும் முதுகில் தாக்கியதாகவும், பணம் உள்ளதா எனக் கேட்டு மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் பணம் இல்லை என்பது தெரியவந்ததும், அவரை தாக்கிவிட்டு 2 இருசக்கர வாகனங்களில் 4 பேரும் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்து சுமார் 5 கி.மீ நடந்தே வந்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பெருமாள்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அருண்குமார், விஷ்ணு சுப்பு, பூபதி ராஜா ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
செய்திகள்
Grindr வழக்கில் 3 இளைஞர்கள் கைது! – மேலும் ஒருவருக்கு வலை
The News Outlook
🕒 8 ஆக., 2026, 10:39 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

