ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் சீர்குலைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அத்திகுளம் கிராமப் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது கோடைக் காலம் தொடங்கியுள்ளதால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இப்பகுதிக்குத் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வரை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த 60 நாட்களாகக் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அரிதாக சில நேரங்களில் விநியோகிக்கப்படும் தண்ணீரும் போதிய அளவில் இல்லாததால், அன்றாடத் தேவைகளுக்காகத் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்துக் குடிநீரை விலைக்கு வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் தெரிவிக்கையில், "குடிநீர் பிரச்சனை குறித்துப் பலமுறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என வேதனையுடன் குறிப்பிட்டார்.
எனவே, அத்திகுளம் கிராம மக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, உடனடியாக முறையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

