விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் கிழக்கு காலனியைச் சேர்ந்த அய்யனார் (38). இவரது 17 வயது மகள் 11ம் வகுப்பு பயின்று வரும் நிலையில் அதே ஊரை சேர்ந்த பெரியசாமி என்ற 21 வயது இளைஞர் மாணவியை காதலிப்பதாக கூறி அவர் பள்ளி செல்லும்போது பின் தொடர்ந்து தொடர் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. பெரியசாமி தன்னை பின்தொடர்வது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து மாணவியின் தந்தை அய்யனார், பெரியசாமியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அய்யனார் குடும்பத்தினருக்கும், பெரியசாமி குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் விரோதமாக மாறி பகை நீடித்துள்ளது. இந்த பகையை மனதில் வைத்துக்கொண்டிருந்த பெரியசாமி தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த அய்யனாரிடம் வேண்டுமென்றே தனது சகோதரர் அழகுராஜா உள்ளிட்ட தனது குடும்பத்தாருடன் சேர்ந்து தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட கைகலப்பின்போது பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யனாரின் முதுகில் குதியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடி துடித்து கிடந்த அய்யனாரின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகள் மற்றும் மகன் சம்பவ இடத்திற்கு தனது தந்தையை காப்பாற்ற சென்றபோது இருவரையும் பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தார் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பிள்ளைகள் கண்முன்னே அய்யனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சம்பவம் அறிந்து சென்ற வத்திராயிருப்பு காவல் நிலைய போலீசார் கொலை செய்யப்பட்ட அய்யனாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கொலை செய்யப்பட்ட அய்யனாரின் தாய் பெரிய கருப்பி அளித்த புகாரின் பேரில் கொலை செய்த பெரியசாமி, அவரது சகோதரர் அழகுராஜா அழகு ராஜாவின் மனைவி பேச்சியம்மாள் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தன் பிள்ளைக்கு லவ் டார்ச்சர் கொடுத்ததை தட்டிக்கேட்ட தந்தையை ஒரு குடும்பமே சேர்ந்து கொலை செய்த சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள்
சிறுமியை பின்தொடர்ந்த இளைஞரை தட்டிக்கேட்ட தந்தை கத்தியால் குத்திக்கொலை!
The News Outlook
🕒 14 ஆக., 2026, 08:58 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
