கோவை: பெண்களிடையே மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதற்கான விழிப்புணர்வையும் மருத்துவ சேவையையும் மேம்படுத்தும் வகையில், மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கான நடமாடும் மருத்துவ வாகனம் கோவையில் தொடங்கப்பட்டது.
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் பி பிளாக் வளாகத்தில், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3242-C மாவட்டம் சார்பில் இந்த வாகனத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த சேவைத் திட்டம் லயன்ஸ் மாவட்டம் 3242-C-ன் நிதியுதவி, அருணா அபய் ஆஸ்வால் அறக்கட்டளையின் பங்களிப்பு, கிராப்ஸ் மேன் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதி மற்றும் பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.
விழாவில் திட்ட ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் மாவட்ட ஆளுநரும், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவருமான லயன் ஆர். பழனிசாமி வரவேற்புரையாற்றினார்.
லயன்ஸ் மாவட்டம் 3242-C ஆளுநர் லயன் பி.எஸ். செல்வராஜ், திட்டத் தலைவர் லயன் ஆர். நித்தியானந்தம், பன்னாட்டு இயக்குனர் லயன் எஸ்.டி. சீனிவாசன், முன்னாள் பன்னாட்டு இயக்குனர் லயன் அருணா ஆஸ்வால், பி.எஸ்.ஜி. புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் டி. பாலாஜி, கிராப்ஸ் மேன் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடமாடும் மருத்துவ வாகன சேவையை தொடங்கி வைத்தனர்.
மேலும், முன்னாள் பன்னாட்டு இயக்குனர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், முன்னாள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சண்முகசுந்தரம், மருத்துவமனை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பெண்களுக்கு எளிதில் மருத்துவப் பரிசோதனை கிடைக்கும் வகையில் இந்த நடமாடும் வாகனம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மார்பக புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகள் மற்றும் விழிப்புணர்வு சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வை பி.எஸ்.ஜி. மருத்துவமனையைச் சேர்ந்த ஜானகிராம் மற்றும் லயன் சி. முத்துசாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

