வானில் அரிதாக நிகழும் முழு சூரிய கிரகணம் நேற்று உலகின் பல்வேறு பகுதிகளில் தென்பட்டது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு ஒரே நேர்கோட்டில் கடந்து வந்தபோது, சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்பட்டு, பகல் நேரத்திலேயே பல இடங்களில் இருள் சூழ்ந்தது. இந்த அற்புதமான வானியல் நிகழ்வை பொதுமக்கள் மற்றும் வானியல் ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
முழு சூரிய கிரகணத்தின் போது, நிலவு சூரியனை முழுமையாக மறைக்கும் நிலையில் அதன் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ மட்டும் பிரகாசமான ஒளிவட்டமாக காட்சியளிக்கும். இதனால் வானில் உருவாகும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ரஷ்யாவில் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் சூரியனை நிலவு மறைக்கத் தொடங்கியது. தொடர்ந்து கிரகணப் பாதையில் இருந்த பல்வேறு பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் வானத்தை நோக்கி இந்த அரிய நிகழ்வை ரசித்தனர்.
ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜாவிக்கில் இந்த நிகழ்வை காண ஏராளமான வானியல் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் திரண்டனர். அங்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழு சூரிய கிரகணத்தை நேரில் கண்டு ரசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் சூரியன் மறையும் நேரத்தை ஒட்டியபடி கிரகணம் நிகழ்ந்ததால், சூரிய அஸ்தமனத்துடன் இணைந்த அரிய காட்சியையும் மக்கள் ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ஸ்பெயினில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம் தென்பட்டதால், பொதுமக்கள் உற்சாகத்துடன் இதனை வரவேற்றனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும் நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் சூரிய கிரகணத்தை பார்த்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஈபிள் கோபுரத்தை பின்னணியாகக் கொண்டு பகுதி சூரிய கிரகணம் தென்பட்டதால், அந்தக் காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்தனர்.
ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வடமேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், கனடாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வட அமெரிக்காவின் சில இடங்களிலும் பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது.
இந்திய நேரப்படி இரவு 11.16 மணியளவில் கிரகணம் நிகழ்ந்ததால், இந்தியாவில் இருந்து இந்த அரிய வானியல் நிகழ்வை நேரடியாகக் காண முடியவில்லை.

