பிரதமரின் அவசரகால நிவாரண நிதியான PM CARES Fund-இன் மொத்த இருப்பு 2024–25 நிதியாண்டு இறுதியில் ரூ.8,452.07 கோடியாக உயர்ந்துள்ளதாக சமீபத்தில் வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நிதியின் இருப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
தணிக்கை அறிக்கையின்படி, 2025 மார்ச் 31 நிலவரத்தில் ரூ.8,452.07 கோடி இருப்பில் சுமார் 93 சதவீதம் (ரூ.7,846.65 கோடி) வங்கிகளின் நிலையான வைப்பு (Fixed Deposit) கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. மீதமுள்ள ரூ.605.41 கோடி சேமிப்பு வங்கி கணக்குகளில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
2024–25 நிதியாண்டில் உள்நாட்டு நன்கொடைகள் ரூ.479.05 கோடியாக பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட சுமார் 30 சதவீதம் குறைவாகும். வெளிநாட்டு நன்கொடைகளும் குறைந்துள்ள நிலையில், நிலையான வைப்புகளில் இருந்து கிடைத்த ரூ.469.38 கோடி வட்டி வருவாய் நிதியின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்தது.
அதே காலகட்டத்தில் PM CARES நிதியிலிருந்து மொத்த செலவினம் ரூ.87.85 லட்சம் மட்டுமே பதிவாகியுள்ளது. இதில் பெரும்பாலான தொகை PM CARES for Children திட்டத்திற்காக செலவிடப்பட்டதாக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் உருவாக்கப்பட்ட PM CARES Fund, இயற்கை பேரிடர்கள், பொதுச் சுகாதார அவசரநிலைகள் மற்றும் பிற நெருக்கடி சூழ்நிலைகளில் நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

