4,000-ஐ கடந்த பாதிப்பு; பெங்களூருவில் 2,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கர்நாடகாவில் H1N1 எனப்படும் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் இதுவரை மாநிலம் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் இந்த ஆண்டில் இதுவரை 4,125 H1N1 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் பெங்களூரு பகுதிகளில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 2025-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் 4,583 பாதிப்புகள் பதிவான நிலையில், இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை ஏற்கனவே நெருங்கியுள்ளது.
குறிப்பாக, கிரேட்டர் பெங்களூரு பகுதியில் மட்டும் ஆகஸ்ட் 22-ம் தேதி நிலவரப்படி 2,070 காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நிலைமையை ஆய்வு செய்ய உள்ளனர்.
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கில் நீர் வடிதல், உடல்வலி மற்றும் சோர்வு உள்ளிட்டவை H1N1-ன் முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம். தொடர்ந்து அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்களை அணுகுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், நோய் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை புதிய வகை உருமாற்றம் கொண்ட வைரஸ் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

