தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து நேர்ந்தால், 10 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் உள்ள இடத்தை ஆம்புலன்ஸ் 10 நிமிடங்களுக்குள் அடைய வேண்டும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) புதிய சேவைத் தர விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, “கோல்டன் ஹவர்” எனப்படும் உயிர் காக்கும் முதல் ஒரு மணி நேரத்தில் மருத்துவ உதவியை விரைவாக வழங்கும் நோக்கில் அமல்படுத்தப்படுகிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதலின்படி, அவசர அழைப்பு பதிவு செய்யப்பட்ட பிறகு 10 கி.மீ. தூரத்திற்குள் உள்ள விபத்து இடத்தை ஆம்புலன்ஸ் அதிகபட்சம் 10 நிமிடங்களில் சென்றடைய வேண்டும். 10 கி.மீ.க்கு மேற்பட்ட இடங்களுக்கு தூரத்துக்கு ஏற்ப கூடுதல் நேரம் அனுமதிக்கப்படும். இதன் கண்காணிப்பு GPS மற்றும் Incident Management System (IMS) மூலம் மேற்கொள்ளப்படும்.
மேலும், அழைப்பை ஏற்றுக்கொண்ட நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் காயமடைந்தவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவை மீறினால் அல்லது அவசர சேவையை நிராகரித்தால், ஒவ்வொரு சம்பவத்திற்கும் ₹10,000 அபராதம் விதிக்கப்படும் என NHAI தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் செயல்படும் சுமார் 3,000 ஆம்புலன்ஸ்கள், ரோந்து வாகனங்கள் மற்றும் மீட்பு கிரேன்கள் அனைத்தும் NHAI Care அமைப்புடன் இணைக்கப்பட்டு, அவசர மீட்பு நடவடிக்கைகள் நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளன. இதன் மூலம் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதே முக்கிய நோக்கமாகும்.

