நாட்டின் 80-வது சுதந்திர தின விழா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை முன்னிட்டு, விருதுநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தொடர்ந்து 10 மணி நேரம் 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி ‘நோபல் உலக சாதனை’ (Noble World Record) படைத்துள்ளார்.
விருதுநகரில் இயங்கி வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர் அருணேஷ் இச்சாதனை நிகழ்வில் ஈடுபட்டார். எவ்வித உணவு இடைவேளையோ அல்லது இயற்கை உபாதைகளுக்கான இடைவெளியோ இன்றி, தொடர்ச்சியாக 10 மணி நேரம் 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
சாதனை நேரத்திற்குப் பிறகும், இரட்டைக் கம்பு, சுருள்வாள், மான்கொம்பு, அலங்கார சிலம்பம் மற்றும் வாள்-கேடயம் வீச்சு போன்ற பாரம்பரிய தற்காப்புக் கலைச் செய்முறைகளைத் திறம்படச் செய்து காட்டிப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். இச்சாதனையை நிகழ்த்திய மாணவர் அருணேஷைக் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு மனதாரப் பாராட்டினர்.

