கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து பேசும்போது, தற்போது புதிய உறுப்பினர்கள் பலர் சட்டமன்றத்திற்கு வந்துள்ளதாகவும், அவர்கள் அனுபவம் பெற்ற பின்னர் அவர்களின் செயல்பாடுகள் குறித்து பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சட்டமன்றத்தை நகைச்சுவையாக பார்க்கக்கூடாது என்றும், சட்டங்களை இயற்றக்கூடிய முக்கியமான சபை என்பதால் அதன் நிகழ்வுகளை அனைவரும் மரியாதையுடன் அணுக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பட்டாசு ஆலை உரிமம் வழங்குவதில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் நல்ல அதிகாரிகளும், தவறான செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளும் இருக்கக்கூடும் என்றார்.
அதிமுக, திமுக அல்லது தவெக ஆட்சி என பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆட்சிக் காலங்களிலும் அதிகாரிகளின் செயல்பாடுகளை பொதுவாக ஒட்டுமொத்தமாக குற்றம்சாட்டுவது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது அனைத்து இடங்களிலும் முழுமையாக தவறுகள் இல்லாமல் நிர்வாகம் நடைபெறுகிறது என்று கூறுவதும் தவறானது என குறிப்பிட்ட அவர், ஆங்காங்கே சில தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறினார். குறிப்பாக பட்டாசுத் தொழிலைப் பொறுத்தவரை, தொழிலாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை புரிந்து கொண்டு செயல்படும் நேர்மையான அதிகாரிகள் அதிக அளவில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும், எனவே ஒட்டுமொத்தமாக அனைத்து அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு முன்வைப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறினார்.
விஜய் பிரதமராவார் என்ற பேச்சு
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் எதிர்காலத்தில் பிரதமராக வருவார் என்ற பேச்சு குறித்து கேட்கப்பட்டபோது, ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த தலைவரை முதலமைச்சர், பிரதமர் அல்லது ஜனாதிபதியாக கற்பனை செய்து பார்ப்பது வழக்கம் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
அதேபோல் விஜயின் ரசிகர்கள் அவர் தற்போது முதலமைச்சராக இருப்பதால், அடுத்தகட்டமாக பிரதமராக வருவார் என கற்பனை செய்து வருவதாகவும் அவர் கூறினார். ஆனால் அந்த நிலையை அடைய நடைமுறையில் பல படிகளை கடக்க வேண்டியிருக்கும் என்றும், பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார்.
தற்போது பிரதமர் நரேந்திர மோடி வலுவான தலைமையுடன் செயல்பட்டு வருவதாகவும், அவரை எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் இந்தியாவில் வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
மேலும், மோடி உலக நாடுகள் கவனிக்கும் பிரதமராகவும், உலகத் தலைவர்களால் மதிக்கப்படும் பிரதமராகவும் இருப்பதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவருடன் பேச விரும்பும் அளவுக்கு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற தலைவராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
“நரேந்திர மோடிக்கு நிகராகவும், இணையாகவும் சொல்லக்கூடிய அளவுக்கு இந்தியாவில் தற்போது வேறு யாரும் இல்லை” என்றும் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் தவெக இடையேயான கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த அவர், அந்த கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது என்றும், எந்த நேரத்திலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகக்கூடும் என்றும் விமர்சித்தார்.
மேலும், தவெக ஆட்சி என்பது முழுமையான பெரும்பான்மையுடன் அமைந்த நிலையான ஆட்சி அல்ல என்றும், சூழ்நிலையின் காரணமாக உருவான ஆட்சி என்பதால் எந்த நேரத்திலும் சவால்கள் ஏற்படக்கூடும் என்பதை அக்கட்சியினர் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய சட்டமன்ற கட்டிடம் குறித்து கருத்து
ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய சட்டமன்றம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் கடற்கரை சாலையில் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அப்போது திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். பின்னர் கட்டப்பட்ட சட்டமன்றக் கட்டிடத்தின் அமைப்பு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே சட்டமன்றம் மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய சட்டமன்ற கட்டிடம் அமைக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தால் மகிழ்ச்சி அடைவதாகவும் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

