ஓ.பன்னீர்செல்வம், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்பு
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டதை கொச்சைப்படுத்தும் வகையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதாகக் கூறி, அவரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, தேனி பழைய பேருந்து நிலையத்தில் தேனி மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் முதலமைச்சர் விஜய் சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா குறித்து பேசியதாக விமர்சித்தார். மேலும், இதனால் என்ன பயன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என கூறிய முதலமைச்சர் விஜய், அது குறித்து சட்டப்பேரவையில் ஏன் பேசவில்லை என்றும் தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

