விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வலையங்குளம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்தாமல் அடுத்த நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டதாக கூறி, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் 5 பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரியாபட்டியில் இருந்து கல்குறிச்சி வழியாக விருதுநகர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 5 பெண்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
வலையங்குளம் பேருந்து நிறுத்தத்தில் பெண்கள் இறங்க வேண்டிய நிலையில், பேருந்தில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் இருந்ததாகவும், இதனால் அந்த நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பெண்களை இறக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பெண்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் பேருந்தில் இருந்து இறங்கி பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களை தாக்க முயன்றதாகவும் பெண்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து ஆத்திரமடைந்த பெண்கள் தங்களது செருப்புகளை கழற்றி ஓட்டுநரை விரட்டியபடி அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்து நிறுத்தம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்களுக்கும் ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அரசு பேருந்து சுமார் 15 நிமிடங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர் நிலைமை சுமூகமானதைத் தொடர்ந்து, ஓட்டுநரும் நடத்துனரும் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தை விருதுநகர் நோக்கி இயக்கிச் சென்றனர்.
பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாதது தொடர்பான வாக்குவாதம், பின்னர் ஓட்டுநரை பெண்கள் செருப்பால் விரட்டிய சம்பவமாக மாறியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தை பேருந்தில் பயணம் செய்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

