பொள்ளாச்சியின் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில், நகரின் முக்கிய ரவுண்டானாக்களில் நிறுவப்பட்ட தென்னை மரம், இளநீர் தொழிலாளர்கள் மற்றும் ரேக்ளா காளைகள் சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது.
பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக மத்திய பேருந்து நிலையம், காந்தி சிலை சிக்னல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
‘தென்னை நகரம்’ என்று அழைக்கப்படும் பொள்ளாச்சியின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில், மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் ஆர். கோல்டு நிறுவனர் எம்.எம். ரங்கசாமி சார்பில் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பது போன்ற தத்ரூபமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பொள்ளாச்சி இளநீருக்கு உலகளவில் வரவேற்பு உள்ளதை நினைவுகூரும் வகையில் இளநீர் மற்றும் இளநீர் சீவும் தொழிலாளியின் சிலையும் அங்கு நிறுவப்பட்டுள்ளது.
அதேபோல், காந்தி சிலை சிக்னல் அருகே உள்ள ரவுண்டானாவில் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ரேக்ளா பந்தயத்தை நினைவுகூரும் வகையில் ரேக்ளா காளைகளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிலைகளின் திறப்பு விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைத்தனர்.
சென்னையைச் சேர்ந்த பிளாக்ஷிப் மீடியா நிறுவனத்தின் ஆர். சதீஸ்குமார், ஆர். மகாபிரபு உள்ளிட்ட குழுவினர், பொள்ளாச்சியின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.
பொள்ளாச்சியின் அடையாளங்களையும், பாரம்பரியத்தையும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

