விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் முறைகேடு மற்றும் லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சமீபத்தில் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், பட்டாசு தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவர் கணேஷ் பாண்டி வெளியிட்டுள்ள வீடியோ புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த ஆட்சிக் காலத்தில் விதிமீறல் காரணமாக தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தப்பட்ட பட்டாசு ஆலைகளை மீண்டும் செயல்படுத்த அனுமதி பெறுவதற்கு அதிகாரிகளுக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலை இருந்ததாகக் கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் நடவடிக்கைகளுக்குப் பின்னர், விதிமீறல் காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த 147 பட்டாசு ஆலைகள் எந்தவித பணப்பரிமாற்றமும் இன்றி மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை அமைச்சர் கீர்த்தனாவின் சாதனையாகவும் கணேஷ் பாண்டி குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் உள்ளதாகவும், கடந்த காலங்களில் ஒவ்வொரு கடைக்கும் உரிமம் பெற சுமார் ரூ.1.5 லட்சம் வரை அதிகாரிகள் லஞ்சமாக பெற்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், உரிமம் பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போது பட்டாசுக் கடைகளுக்கான உரிமம் பெற எந்தவித பணமும் செலுத்தாமல், காலதாமதமின்றி உரிமம் வழங்கப்பட்டு வருவதாக கணேஷ் பாண்டி கூறியுள்ளார். இதனால், பட்டாசுத் தொழிலில் நீண்ட காலமாக சந்தித்து வந்த லஞ்சப் பிரச்சினை தற்போது குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் ஊழல் நடைபெற்றதாக தொழில்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் அரசியல் ரீதியாக தொடர்ந்து பேசுபொருளாக உள்ள நிலையில், பட்டாசு தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவரின் தற்போதைய கருத்தும் கவனம் பெற்றுள்ளது. மேலும், லஞ்சமற்ற நடைமுறை தொடர வேண்டும் என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பயனளிக்க வேண்டும் என்றும் அவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

