விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) சார்பில் தொழிலாளர் நலன் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பில் பாரதிய மஸ்தூர் சங்கம் கடந்த 21.11.2025 அன்று முன்வைத்த பரிந்துரைகளை ஏற்று, தொழிலாளர்களுக்கு பாதகமாக உள்ள சட்டப் பிரிவுகளில் மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், அங்கன்வாடி, ஆஷா உள்ளிட்ட திட்டப் பணியாளர்களுக்கு கௌரவ ஊதியத்தை உயர்த்த வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

