விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பாலித்தீன் கிட்டங்கியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், விண்ணை முட்டும் அளவுக்கு அடர்ந்த கரும்புகை வெளியேறி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள விஜயலட்சுமி காலனியில், சிவானந்த நகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்குச் சொந்தமான பாலித்தீன் பை கிட்டங்கு (குடோன்) செயல்பட்டு வருகிறது. இந்த கிட்டங்கின் திறந்தவெளிப் பகுதியில் கழிவு பாலித்தீன் பைகள் மூட்டை மூட்டையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று அந்த மூட்டைகளில் திடீரெனத் தீப்பற்றி, மளமளவென அனைத்து பாலித்தீன் கழிவுகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதன் காரணமாக விண்ணை முட்டும் அளவுக்கு அடர்ந்த கரும்புகை சூழ்ந்ததால், சிவகாசி நகர பொதுமக்கள் கடும் அதிர்ச்சியும் அச்சமும்டைந்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர், இரண்டு தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கையால், அருகில் இருந்த பிற தொழிற்சாலைகளுக்குத் தீ பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாகவே பாலித்தீன் மூட்டைகளில் தீப்பற்றியிருக்கலாம் எனத் தீயணைப்புத் துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

