விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் கட்டட மேற்பார்வையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த தனியார் நிறுவனப் பொறியாளர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகாசி அருகே கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான 'கிருஷ்ணா பட்டாசு ஆலை' செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட இந்த ஆலையில், சுமார் 200 தொழிலாளர்கள் வரை பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருள்களைக் கலவை செய்யும் புதிய இயந்திரத்தைப் பொருத்தும் பணி ஆலையில் நடைபெற்றுள்ளது.
இயந்திரத்தைப் பொருத்தும் பணியின்போது, எதிர்பாராதவிதமாக ரசாயனக் கலவையில் உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதில், ஆலையின் போர்மேனாகப் பணியாற்றி வந்த பாலமுருகன் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இயந்திரத்தைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் நிறுவனப் பொறியாளர் அகமது இப்ராஹிம் (42), 100 சதவீதத் தீக்காயமடைந்தார். அவருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்துத் தகவலறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர், இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இச்சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி காவல் நிலையப் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

