ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புலிகள் சரணாலயப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ 2-வது நாளாக தொடர்ந்து எரிந்து வருவதால், தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியில் நேற்று பிற்பகல் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. அழகர் கோவில், கிடா பள்ளம் பீட் உள்ளிட்ட பகுதிகளில் தீ வேகமாகப் பரவியதாக கூறப்படுகிறது.
தற்போது 2-வது நாளாகவும் காட்டுத்தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த காற்று வீசுவதால், தீ மேலும் அதிகமான பரப்பளவுக்கு பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் வனத்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர், தீ தடுப்பு பிரிவினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் மலைவாழ் மக்களும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் உதவி செய்து வருகின்றனர்.
இதனிடையே, காட்டுத்தீ ஏற்பட்டுள்ள வனப்பகுதியில் புலிகள், யானைகள், மான்கள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருவதால், அவற்றின் பாதுகாப்பு குறித்தும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தீ தொடர்ந்து பரவி வரும் நிலையில், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், காட்டுத்தீயை விரைவாக கட்டுப்படுத்தவும் வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

